Monday, September 20, 2021

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்

மயிலன் எழுதி கடந்த ஆண்டு உயிர்மை பதிப்பகத்தின் வழியாக வெளியான ”பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்” நாவலை வாசித்து முடித்தேன்.

சந்தேகமே இல்லாமல் தமிழின் மிக முக்கியமான/அவசியமான படைப்பு. புனிதப்படுத்தப்பட்ட எந்த ஒரு அமைப்பிற்குள்ளும் இருக்கும்/ இயங்கும் மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி அதே உலகில் அங்கம் வகிக்கும் ஒருவர் சுய விமர்சன அடிப்படையில் எழுதிய நாவலாக மட்டும் இதனைப் பார்க்க வேண்டியதில்லை.

உடற்கூறாய்வு என்று தலைப்பிட்டுவிட்டு மொத்த மனிதர்களின் மனதினையும், எண்ண ஓட்டங்களையும் பகுத்துப் பகுத்து கூறாய்வு நிகழ்த்தியிருக்கிறார். முதுநிலை அறுவை சிகிச்சை மாணவரான பிரபாகரின் தற்கொலைக்கான காரணங்களை அவரது சக மாணவர் ஒருவர் தனக்கு ஒதுக்கப்பட்ட எல்லைக்குள் நின்று கொண்டு புலனாய்வு செய்யும் விதமாகக் கதை பயணமாகிறது.

பிரபாகரின் தற்கொலைக்கான காரணங்களாக அவரோடு தொடர்புடைய ஒவ்வொரு மனிதரின் அனுமானங்களைப் பதிவு செய்ய ஆரம்பிக்கிறார். நமது அனுமானங்கள் எல்லாமும் நமது மனவிரிவின், எண்ண ஓட்டத்தின் வெளிப்பாடுகள் தான். எந்த ஒரு தேவையும் இல்லாமலேயே சக மனிதர்களை நாம் போட்டியாக, எதிராளியாக நினைத்துக் கொள்கிறோம். நம்முடனேயே இருக்கும் இன்னொரு மனிதனின் வெற்றியில் மகிழ்வதற்குப் பதிலாக, போட்டியையும் பொறாமையையும் வளர்த்துக் கொள்கிறோம். அந்தப் பொறாமை வெற்றி பெற்ற மனிதரின் மீதான வெறுப்பாக மாறி, பழி உணர்ச்சியாக ஆழப் பதிந்து, மனதிற்குள்ளேயே வளர்ந்து, வெளியே வருவதற்கான சமயத்தை எதிர் நோக்கிக் காத்திருக்கிறது. 

எந்தத் துறையாக இருந்தாலும் நம்மால் இயலாத ஒன்றைத் தங்களது அயராத உழைப்பின் மூலமாகவும், திறமையின் மூலமாகவும் வளர்த்துக் கொண்ட நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் அர்ப்பணிப்போடும் ஈடுபாட்டோடும் சம நிலையில் போட்டியிட முடியாத பெரும்பாலானவர்கள் நிறைந்தது தான் பொதுச் சமூகம். இதில் முதலிடத்தைப் பிடிக்கும் எந்த ஒரு தேவையும், உள்ளார்ந்த விருப்பமும் இல்லாதவர்கள் நிம்மதியாகத்தான் இருக்கிறார்கள். முதலிடத்திற்குப் போட்டியிட்டுத் தோற்றுப் போகும், எப்போதும் இரண்டாம் மூன்றாம் இடத்திலேயே இருக்கிற மனித மனங்களின் குணாதிசயங்களைப் பற்றி சதாசிவத்தின் கதாப்பாத்திரம் வாயிலாக மிகத் தெளிவாக, விரிவாகவே பதிவு செய்திருக்கிறார். இது மருத்துவத் துறை என்று மட்டும் இல்லை. வெற்றி பெற்ற மனிதர்களைப் பற்றிய உண்மைக்குப் புறம்பான, அவர்களது ஆளுமையைச் சிதைக்கும் வகையில் பகிரப்பட்டுக் கொண்டிருக்கும் எல்லா வகையான வதந்திகளுக்கும் இப்படியான இரண்டாம் நிலையில் இருப்பவர்களே காரணமாக இருக்கிறார்கள். இதன் மூலமாக அப்படி மோசமான நடத்தையோ அல்லது தவறான பாதையைத் தேர்ந்தெடுத்ததால் தான் அந்த நபர் முதலிடத்தில் இருக்கிறார். இல்லாவிட்டால் அந்த இடத்தில் இருக்க வேண்டியவன் நான் தான் என்று தன்னைச் சார்ந்தவர்களிடம் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தை - அது தேவையில்லாத போதும் கூட- அவர்களே உருவாக்கி, அதற்காகவே வாழவும் செய்கிறார்கள். 

இது தவிர, மனித மனங்களில் ஏற்பட்டும் எண்ணற்ற குழப்பமான உணர்வுகளுக்கெல்லாம் உருவம் கொடுத்து, கதாப்பாத்திரங்களாக்கி அவற்றைத் துல்லியமாகவும் எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார். வெறும் வென்ஃப்லான் போட்டுவிட்டதற்காக உண்மையாகவே துயருறும் பாஸ்கரும், ஒருவகையில் பிரபாகரின் மரணத்தைத் தவிர்த்திருக்கலாமோ என்று தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் அன்வரும் நம்மோடுதான் இருக்கிறார்கள். 

ஒரு தற்கொலைக்கு அதுவும் தற்கொலைக் குறிப்பு எதுவும் எழுதிவைத்துவிட்டுச் செல்லாத ஒரு தற்கொலைக்கு எத்தனை வித விதமான அனுமானங்கள் இருக்கின்றன என்பதை புலனாய்வு நாவலின் விறுவிறுப்புடன் வாசிக்க முடிகிறது. 

மயிலனின் மொழி நடை நாவலுக்கும், கதைக் களத்திற்கும் வலுவூட்டுவதாகவே இருக்கிறது. தற்கொலை செய்துகொள்ளும் பிரபாகரின் கோணத்தில் எழுதப்பட்ட பீடிகை அத்தியாயத்தில் இருந்தே அதனை ரசிக்கமுடிகிறது. 

“பழிவாங்கப்படுபவர்கள் எல்லோருமே இங்கே எதிரிகள் அல்லது பழி வாங்குபவர்கள் எல்லோருமே இங்கு நாயகர்கள். எப்பேர்ப்பட்ட பச்சை அயோக்கியத் தனம்? நாயகன் குண்டடி பட்டாலும் செத்துவிடக் கூடாது. செத்துப் போகிறவர்களுக்கு இங்கே நாயக அந்தஸ்த்தே கொடுக்கப்படமாட்டாது.”,

“தகனம் செய்யப்பட்டுவிட்ட துயரத்துடன் நான் ஏன் சம்பாஷித்துக் கொண்டிருக்கிறேன்?” 

“ஒருவர் சொல்லும் உண்மையை நாம் ஏற்காமல் விடுவதைவிடவும், அவர் வலிந்து ஜோடித்துச் சொல்லும் ஒரு பொய்யை நாம் நிராகரிக்கும்போதுதான் அவர் அதிகம் சீண்டப்படுகிறார்”

இப்படியாக நாவல் முழுதுமே அடிக்கோடிட்டு வாசித்த வரிகள் அனேகம். 

மருத்துவத் துறைக்குள் நிகழும் அதிகார வெறியும், மறைமுக மிரட்டல்களும் மருத்துவத் துறைக்கு வெளியில் இருந்து பார்க்கும் நமக்கு அதிர்ச்சியளிக்கிறது. கிட்டத்தட்ட சுயசரிதையின் சாயலில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலில் எழுத்தாளர் அனுமதிக்கும் புனைவின் எல்லையைத் தாண்டி யோசித்தாலுமே மயில்சாமி போன்றவர்கள் நிச்சயமாக இருப்பார்கள் என்றே தோன்றுகிறது. மருத்துவத் துறையில் காலூன்றி, வேர்விட்டுப் பத்தாண்டுகளைக் கடந்திருந்தாலும் கூட மயில்சாமியைப் போன்ற அதிகார வெறிபிடித்தவர்களை எதிர்த்துக் கேள்வி கேட்கும் தைரியம் வாய்க்கவில்லை என்பதில் உண்மை இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. 

பொதுவாக இலக்கியத்தரமான புத்தகம் என்று சொல்லப்படும் பெரும்பாலான படைப்புகள் சாதாரண வாசகர்களை விரட்டியடிக்கும் மொழியில், உள்ளடக்கத்தில் எழுதப்பட்டிருக்கும். ஆனால், மயிலனின் இந்த நாவல் இலக்கியப் பிரதி என்ற மதிப்பீட்டுடன் சந்தேகமே இல்லாமல் விறுவிறுப்புடனும் வாசிக்க முடிகிற புள்ளியையும் தாண்டிச் செல்கிறது. அந்த வகையிலும் இது சிறப்பான படைப்பாகவே இருக்கிறது.


புத்தகம் : பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்.

ஆசிரியர் : மயிலன் ஜி.சின்னப்பன்.

பதிப்பகம் : உயிர்மை.

விலை : 250.



Thursday, June 17, 2021

நீட் தேர்வுகள் ஏன் அநீதி?

 நீட் ஏன் கூடாது, ஏன் அது ஒரு துரோகம் என்பது குறித்து ஏற்கெனவே பலமுறை பலவாறு எழுதிவிட்டார்கள். ஆனால், இப்பொழுதும் நீட் பற்றி சாதாரணமாகப் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

நீட்டை ஆதரிப்பவர்களில் பெரும்பான்மைக்கு நிஜமாகவே அதன் பாதகங்கள் தெரியவில்லை என்பதுதான் கொடுமை. அதன் அடிப்படை துரோகம் தெரிந்தே அதை ஆதரிப்பவர்களை ஒதுக்குவோம். அவர்களிடம் விளக்கிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை.

நீட் குறித்த புரிதல் இல்லாதவர்கள்தான் குழம்பிப் போகிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் நீட் ஒரு சாதாரண நுழைவுத் தேர்வு என்பதாகத் தான் தோன்றும். அதை வைத்து, நீட் அவசியமான ஒன்றாகவும், நன்றாகப் படிக்கிற மாணர்வர்கள் அதில் தேர்ந்து விடுவார்கள் என்பது போலவும் கூறி, நீட்டை எதிர்பவர்கள் ஏதோ முட்டாள்கள் போலவும் நிறையப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் மூலமாக எளிமையாக ஏமாறும் மக்களிடம் உழைப்பே உயர்வு தரும், உழைக்க மறுக்கிற, சோம்பேறிகள் தான் நுழைவுத் தேர்வை எதிர்க்கிறார்கள் என்பதாகப் பிரச்சாரம் செய்து, அது ஒன்றும் பெரிய துரோகம் இல்லை என்பதாகவும் நம்ப வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

சரி, நீட் தேர்வை ஏன் ஒரு துரோகமாகப் பார்க்க வேண்டும்? இது வரையிலும் படித்த பாடங்களில் இருந்துதான் கேள்விகளைக் கேட்கப் போகிறார்கள். நன்றாகப் படித்த மாணவர்கள் அதைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்விகள் எல்லாமே நியாயமாகத் தான் தோன்றும். தவிரவும், உலகம் எங்கோ, எத்தனையோ வேகமாகப் போய்க்கொண்டிருக்கும் போது நாம் இன்னும் ஒரு நுழைவுத் தேர்வுக்குக் கூட தகுதியில்லாமல் அது வேண்டாம் என்று கூறிக் கொண்டிருக்கிறோம் என்கிற கேள்விகளும் நியாயமாகவே தோன்றும்.

2006 ஆம் ஆண்டு வரையிலும் தமிழ்நாட்டிலும் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகள் இருந்தன. அதை ஏன் தேவையில்லாத ஒன்றெனத் தடை செய்தார்கள், அது எவ்வாறு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ, பொறியியல் கனவுகளில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது என்பதைப் புரிந்து கொள்வதில் துவங்குகிறது நீட் ஏன் துரோகம் என்பதற்கான பதில். நுழைவுத் தேர்வினைத் தடை செய்தது ஏன் சமூக நீதி என்பது புரிந்தால் நீட்டை எதிர்க்கத் துவங்குவோம்.

ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களினால் இது போன்ற நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற முடியாது என்கிற போது அவர்களால் எப்படி அந்தப் படிப்புக்களில் நிபுணராக முடியும் என்கிற புது வகையான கேள்வியும் பிறக்கும். அதில் தவறில்லை. இதில் இருக்கும் மிகப் பெரிய ஓட்டை, இது போன்ற வடிகட்டுத் தேர்வுகளுக்காக ஒன்பதாம் வகுப்பில் இருந்தே, சில லட்சங்களைச் செலவு செய்து தனியாகப் பயிற்சி எடுத்து வரும் மாணவர்களுடன், அந்த வாய்ப்புக்கள் அமையப்பெறாத மாணவர்களும் போட்டியிடுவது எந்த வகையிலும் அறமல்ல என்பதைப் புரிந்து கொள்வோம்.

நுழைவுத் தேர்வுகளுக்கு விலக்குக் கோருவதன் மூலமாக நாம் நமது மாணவர்களின் திறனைக் குறைத்து மதிப்பிடுகிறோம் என்றெல்லாம் எப்போதும் எண்ண வேண்டிய அவசியமே இல்லை. நுழைவுத் தேர்வுகளுக்காக மட்டுமே பல லட்சங்களைச் செலவிடக் கூடிய சொகுசு வாய்ந்த மாணவனையும், பொதுத் தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டிய சில ஆயிரம் ரூபாய்களுக்கு அல்லல்படும் மாணவர்களையும் நாம் அறிவோம். நீட் போன்ற தேர்வுகள் மிக எளிதாக இந்த மாணவர்களின் போட்டியிடும் மனப்பான்மையையே உடைத்துப் போட்டுவிடுகின்றன. ஏனென்றால், தன்னைச் சுற்றிலும் தான் பார்க்கும் ஓரளவு வசதி படைத்த மாணவர்கள் பெரும் தொகையினைச் செலுத்தி நுழைவுத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் போது, தன்னால் அது இயலாமல் போகிறதே என்ற பயம் அவர்களை அறியாமலேயே ஒரு தாழ்வுணர்ச்சியை ஏற்படுத்திவிடுகிறது. இதில் சில விதி விலக்குகள் இருக்கலாம். விதிவிலக்குகள் என்பதெல்லாம் ஆயிரத்தில், லட்சத்தில் ஒன்று தான். விதிவிலக்குகள் எப்போதும் உதாரணங்கள் அல்ல.

பனிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தான் பெறுகின்ற மதிப்பெண்களே அடுத்து வரும் மருத்துவப் படிப்பிற்குப் போதுமானது என்கிற உந்துதலில் படிக்கும் போது அவர்களால், அந்தக் கனவினை நோக்கித் தங்களது முழு ஆற்றலையும் பயன்படுத்திப் போட்டியிட முடியும். ஆனால், அதைத் தாண்டியும் ஒரு தடை, ஒரு வடிகட்டல் நிகழும் என்பதே அவர்களது உத்வேகத்தைக் குறைத்து கல்வி மீதான நாட்டத்தைக் குறைக்கச் செய்துவிடும். எப்படிப் படித்தாலும் நாம் விரும்பிய மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைக்கப் போவதில்லை என்பதில் துவங்கி, எதற்காகப் படிக்கிறோம் என்ற கேள்வியில் போய் நிற்கும். அதன் பிரச்சினை என்னவென்றால், நாம் விரும்பியதைப் படிக்க முடியாவிட்டால் எதற்காகப் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தை மறைமுகமாக விதைத்துவிடும்.

பனிரண்டாம் வகுப்பிற்குப் பிறகு நமக்குப் பிடித்ததைப் படிக்கலாம் என்று முழு மூச்சாகப் படித்து, அதில் தோல்வியுற்றாலும் கூட இதர மருத்துவப் படிப்புக்களையோ அல்லது பொறியியலோ அல்லது அறிவியல் படிப்புக்களுக்கோ செல்கிற வாய்ப்பும், பக்குவமும் கூட அவர்களுக்கு வந்துவிடலாம். ஆனால், நீட் போன்ற தேர்வுகள் ஒரு குறுக்கீடாக நின்று கொண்டிருக்கும் போது பெரும்பாலான கிராமப்புற மாணவர்கள் பத்தாம் வகுப்பிலேயோ அல்லது அதற்கும் முன்னதாகவோ கூட இடை நின்று கல்வியில் இருந்து விலகிச் சென்றுவிடவும் அநேக வாய்ப்புக்கள் இருக்கின்றன. இத்தனை ஆண்டுகளாக கல்விக்காகவும், நமது மாணவர்களுக்காகவும் எத்தனையோ திட்டங்களைத் தீட்டி அவர்களைச் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மேம்படுத்திக் கொண்டிருக்கும் நமது மாநிலத்தின் முன்னேற்றம் ஒரே ஒரு தேர்வின் மூலமாகப் பின்னால் செல்லக் கூடிய அபாயமும் இருப்பதாகவே உணர்கிறேன்.

ஒரு நுழைவுத் தேர்விற்குப் பயந்துவிட்டு எல்லோரும் படிப்பதை நிறுத்திவிடுவார்களா என்ற கோணம் கொஞ்சம் மிகையாகத் தோன்றலாம். நமது நடுத்தர மற்றும் கீழ் நடுத்தரக் குடும்பங்களின் ஒரே இலக்கு தங்களது குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்கிவிட வேண்டும் என்பது மட்டும் தான். அதிலும், தங்களது சம்பாத்தியத்தில் பெரும் தொகையைப் பிள்ளைகளின் கல்விக்காக மட்டுமே செலவழித்துவிட்டு, அதற்காகத் தங்களது எத்தனையோ அத்தியாவசியத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்யாமல் வாழும் குடும்பங்கள் அதிகம். இவர்களுக்கும், இவர்களுக்குக் கீழ் நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கும் நீட் மிகப் பெரிய அச்சுறுத்தல் தான்.

இரண்டு வருடங்களாக நீட் தேர்விற்குத் தயாராகிவரும் சில மாணவர்களை நான் அறிவேன். அவர்களுக்கு அவர்கள் செலவழிக்கும் இந்த இரண்டு வருடங்களோ சில லட்சங்களோ ஒரு பொருட்டே அல்ல. ஒருவேளை இன்னும் ஓரிரு வருடங்கள் செலவழித்துத் தோற்றுப் போனாலும் அது எந்த வகையிலும் அவர்களது பொருளாதார, எதிர்கால வாழ்க்கையைப் பாதிக்கப் போவதில்லை. ஆனால், ஒரு கீழ் நடுத்தரக் குடும்பத்தில் இருக்கும் மாணவனுக்கு இந்தச் சொகுசு எப்போது வாய்க்கப் போவதில்லை. அவன் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும், ஒவ்வொரு ஆண்டும் அவனது உயர்கல்வியை, உயர் கல்விபெறும் வாய்ப்பினை கடுமையாகப் பாதிக்கக் கூடியதுதான்.

பல தலைமுறைகளாக மருத்துவர்களும், பொறியாளர்களும் உருவாகிவரும் ஒரு குடும்பப் பிண்ணனியில் ஒரு மாணவர் மருத்துவராவது பத்தோடு பதினொன்றாக எண்ணிக்கைக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். அதுவே முதல் தலைமுறையில், முதல் முதலாகப் பள்ளிக்கு வந்து, மருத்துவக் கல்லூரிக்குள் நுழைகிற மாணவர் தான் சார்ந்த சமூகத்தை மொத்தமாக கல்வியின் பக்கமாக இழுத்துவரும் சங்கிலியின் முதல் கண்ணி ஆகிறார். அவரைத் தொடர்ந்து நிச்சயமாக எத்தனையோ மாணவர்கள் அவரது சுற்றத்தில் படிக்க வேண்டும் என்னும் உத்வேகமடைவார்கள். அந்த அண்ணனைப் போல, அந்த அக்காவைப் போல நானும் மருத்துவராவேன் என்னும் கனவினை அவர்களுக்குள் உருவாக்கும் அதி முக்கியமான கண்ணி அது. அந்தக் கண்ணிகளைத் தான் நீட் என்னும் பெயர் கொண்டு தகர்த்துக் கொண்டிருக்கிறார்கள். முதல் தலைமுறையில் படித்து மேலே வரும் மாணவர்களில் ஒரு சிலரேனும் மருத்துவமோ, பொறியியலோ படித்து மேலே வரவில்லையானால் அவர்கள் சுற்றத்தில் படித்து மட்டும் என்ன செய்யப் போகிறோம் என்கிற கேள்வியை ஆழமாகப் பதியவைக்கும் முதல் கண்ணியாகவும் அவர்களே மாறுவார்கள்.

நாம் நம் மாணவர்களை எந்தக் கண்ணியாக மாற்றப் போகிறோம்?

Sunday, June 2, 2019

இந்தித் திணிப்பு எதிர்ப்பு ஏன்?

இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்வது நல்லது தானே? ஏன் எதிர்க்கிறார்கள்? என்பதாகச் சிலர் பேசிவருவதைக் காண முடிகிறது. நிச்சயம் நல்ல கேள்வி தான். இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை. அது இந்தியோ, சமஸ்கிருதமோ, கன்னடமோ, ஜாவாவோ, பைத்தானோ,பாரசீகமோ, பதினாறாம் வாய்ப்பாடோ!

ஆனால், இந்தியைக் கற்றுக்கொண்டே தீர வேண்டும் என்பதில் இருக்கும் பிரச்னைகள் புரியாமல் நம் முன்னேற்றத்தைத் தடுக்கவே அதனை எதிர்க்கிறார்கள் என்பதாகப் புரிந்து கொள்வது ஆபத்தானது. முதலில், நம் முன்னேற்றம் என்பதில் இருக்கும் நாம் யார் என்பது முக்கியமானது. உயர் சாதி, FC மக்களில் அந்த நாம் இல்லையென்பது முக்கியமானது. அவர்கள் ஏற்கெனவே ஆங்கிலத்தை ஆங்கிலேயர்களை விடவும் தெளிவாகக் கற்றுக்கொண்டு IELTS, TOEFL என்று போய்விட்டார்கள். அவர்களுக்கு இந்தித் திணிப்பைப் பற்றியெல்லாம் கவலை கொள்ள ஒன்றுமில்லை. மேலும், இந்தியை இந்தியாவிற்கான ஒரு பொது மொழியாக மாற்றுவதில் அவர்களுக்கு நிச்சயமாகப் பெரும் பலன்களும் இருக்கின்றன. அதனைப் பின்னால் பார்க்கலாம்.

பொருளாதார மற்றும் சாதிப் படிநிலையில் நடுத்தர மற்றும் அடிமட்ட நிலையில் இருக்கும் மக்கள் தான் அந்த நாம். நமக்கு இந்தித்திணிப்பால் நேரப்போகும் பிரச்னைகள் என்னவாக இருக்கும் என்பதை முதலில் புரிந்து கொள்வோம். நாமும், நம் அப்பா, அம்மா, தாத்தா அவரது தாத்தா என்று நமக்குத் தெரிந்த ஒரே மொழி தமிழ் தான். நானூறு ஆண்டுகளாக ஆங்கிலம் இருந்தாலும் இப்பொழுதுதான் நாம் அதனைக் கடுமையான இலக்கணப் பிழைகளுடன் மெதுவாகக் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறோம். கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த ஒரு மொழியை இப்பொழுதுதான் எழுதவும், கொஞ்சம் கொஞ்சமாகப் பேசவும் கற்றுக் கொள்கிற ஒரு தலைமுறை உருவாகிவருகிறது.

கிராமப்புற மற்றும் மத்திய நகர்ப்புற அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இப்பொழுதும் ஆங்கிலம் என்றால் பயம்தான். அந்தப் பயத்தையும் தாண்டித்தான் அவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொள்கிறார்கள். அது அவசியமானதும் கூட.  அவர்கள் பின்னாளில் படிக்கவிருக்கும் அனைத்துப் பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகள் எல்லாமே ஆங்கிலத்தின் வாயிலாகத்தான் இருக்கும் என்பதால் ஆங்கிலம் தவிர்க்க இயலாதது மற்றும் தவிர்க்கக் கூடாததும் கூட.

கிட்டத்தட்ட LKG வகுப்புக்களில் இருந்து பத்துப் பதினைந்து வருடங்கள் ஆங்கிலத்தை முறையாகக் கற்றுக் கொண்ட பின்பும், பள்ளிக் கல்வியைத் தாண்டி, தாய்மொழி வழிக் கல்வியைத் தாண்டி, ஆங்கிலத்தில் பட்டப் படிப்புப் படிக்கச் செல்லும் பெரும்பான்மை மாணவர்களுக்கு இப்பொழுதும் ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது. ஆங்கில வழி நுழைவுத் தேர்வுகள், ஆங்கில வழிப் போட்டித் தேர்வுகள் என்று எல்லா இடங்களிலும் ஆங்கிலத்தை எதிர்கொள்ளும் போதும் இந்தப் பயம் இருக்கிறது. ஆனால், ஆங்கிலம் உலகப் பொது மொழி என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை; நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஆங்கிலத்தை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். சந்தேகமே இல்லாமல் பொருளாதார வளர்ச்சிக்கு ஆங்கிலம் அவசியம்.

ஆங்கிலம் சிரமமாக இருக்கிறது என்பதை எளிமையாக இப்படித் திரிக்கலாம். இருபது வருடங்கள் ஆங்கிலத்தில் படித்தும் அதில் எழுதத் தெரியாமல், அதனைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது மாணவர்களின் திறன் இல்லாமை தானே, அவர்களின் விருப்பமில்லாமை தானே என்பதாகச் சொல்லலாம். அல்லது அவர்களுக்குச் சரியாகச் சொல்லிக் கொடுக்காத பள்ளிகளை, கல்விக் கொள்கைகளைக் குறை கூறலாம். பயிற்றுவிக்கும் முறையிலோ அல்லது கல்விக் கொள்கைகளிலோ மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமாக எல்லோரையும் ஒரு மொழியில் திறன் மிக்கவராக்கிவிடலாம் என்று கூறலாம். இதனை ஒரு அரசு செய்யும் புரட்சியாகவும், முன்னேற்றத்திற்கான அடிக்கல் என்பதாகவும் பிரச்சாரம் செய்யலாம். அதில் உண்மை இருப்பதைப் போலவே தான் தோன்றும். ஆனால், நாம் அந்நிய மொழிகளை நம் சுற்றத்தில் எங்கும் பயன்படுத்துவதே இல்லை. பேச்சு வழக்கில் இல்லை. நாம் பேசுகிற, நம்மோடு பேசுகிற எல்லாமே தாய்மொழியில் இருப்பதால் அந்நிய மொழிகளில் விற்பன்னராவது எளிதானதல்ல. மேலும் தேவையுமல்ல. தேவைப்படும்போது தேவைப்படுபவர் கற்றுக் கொள்ளவும் செய்வார்!

இந்தியை மொத்த நாட்டிற்குமான பொதுமொழி என்று சொல்வதை நாம் ஆங்கிலத்தை வைத்துப் புரிந்து கொள்வோம். இப்பொழுது ”இந்தியும் ஒரு மொழிதான சார், அதையும் சேர்த்துப் படிச்சுட்டா இன்னும் வடக்க போய் நிறைய சம்பாதிக்கலாம்ல, திராவிடக் கட்சிகள் அதை எதிர்த்து அரசியல் செய்யுறாங்க, நம்மை முன்னேறவே விட மாட்டாங்க” என்பதைப் பார்ப்போம்.

இத்தனை ஆண்டுகளாக ஆங்கிலம் இங்கே ஊன்றியிருந்தும் நம்மால் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவோ எழுதவோ முடியாததற்குக் காரணம் அதன் மேலுள்ள வெறுப்போ, அரசியல் காரணங்களோ அல்ல. அது நம் அன்றாட வாழ்வில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இத்தனைக்கும் நாம் பேசுகிற, புழங்குகிற கருவிகள் எல்லாவற்றிலும் ஆங்கிலம் கலந்திருந்தாலும். தவிரவும் இப்பொழுதுதான் நம் பெரும்பான்மை கல்வி கற்க வருகிறது. அவர்களுக்கு அவர்கள் பேசுகிற, புழங்குகிற, அவர்கள் மொழியில் பாடங்களும், கேள்விகளும், தேர்வுகளும், அரசின் அறிவிப்புக்களும் இருப்பதுதான் அறம். அப்பொழுதான் போட்டித் தேர்வுகளை அச்சமின்றி அணுக முடியும். அதுவல்லாமல், திடீரென அறிமுகமற்ற ஒரு மொழியைக் கட்டாயமாக்கி, இனி உங்கள் தேர்வுகள் இந்த மொழியில் தான் இருக்கும் என்று கூறி வடிகட்டுவது ஜனநாயக முறையல்ல. இதைத்தான் திணிப்பு என்கிறோம். ஆனாலும், நாம் ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்கிறோம். இத்தனை தடைகள் இருந்தாலும் ஆங்கிலம் பெரும் திறவுகோல் என்பதால் அதனை ஏற்றுக் கொள்கிறோம்.

இப்பொழுது இந்தி மொழியை மூன்றாம் மொழியாக இந்தி பேசாத மாநிலங்களில் கட்டாயமாக்குவதை ஏன் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம். இந்தியாவின் அலுவலகத் தொடர்பு மொழியாக இந்தியும், ஆங்கிலமும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் கிட்டத்தட்ட 50 கோடி மக்கள் இந்தி பேசுகிறார்கள். அந்த ஐம்பது கோடி மக்களிலுமே அந்தந்த மாநிலத்தின் சொந்த மொழியின் அடிப்படையில் பிரித்தால் இந்தியை மட்டுமே தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்கள் என்று எதுவுமே இல்லை. ஆனாலும், இந்தியாவில் அதிக அளவில் பேசப்படும் மொழி இந்தி என்பது உண்மைதான். பிராந்திய மொழிகளுடன் இந்தியும் சுமார் ஐம்பது கோடி மக்களால் பேசப்படுகிறது. மீதமிருக்கும் 80 கோடி மக்களுக்கு இந்தி தெரியாது. அவர்கள் பிராந்திய மொழிகளுடன் ஆங்கிலத்தைப் பேசுகிறார்கள். அதாவது படித்தவர்கள், மற்ற இந்திய மாநிலங்களுடன் தொடர்பு கொள்ள, ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறார்கள். உலகத்துடன் தொடர்பு கொள்ளவும் ஆங்கிலம் தான்.

அதிகமான மக்கள் பேசுகிற மொழியான இந்தியை இந்தியா முழுவதற்குமான பொது மொழியாக உருவாக்கும் முன்னெடுப்புகள் வெற்றியடைந்தால், அதன் பாதகங்கள் நம்மை மிகக் கடுமையாகப் பாதிக்கும். எப்படிப் பாதிக்கும்? NEET விவகாரத்தை வைத்துப் புரிந்து கொள்வோம். ஒருவேளை இந்தியா முழுமைக்கும் இந்தியைக் கற்றுத் தேர்வது கட்டாயம் என்ற நிலை வருமாயின், அடுத்தடுத்து பெரும்பான்மை அரசுகள் அமைகையில் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் நாடு முழுவதும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே தேர்வுகள் அமையும் என்ற சட்டம் வரலாம்! பிராந்திய மொழிகளை மட்டுமே பேசி, அதனைப் புரிந்து கொள்கிற மாநிலங்களில் உள்ள மாணவர்களின் எதிர்காலம் மிகக் கடுமையாகப் பாதிப்படையும்.

இந்தியை நாம் ஏற்றுக் கொண்டோமானால், இது நேரலாம். அதனை நம்மால் எதிர்க்கவும் முடியாது. எதிர்த்தால் அதே பழைய தர்க்கத்தை நம் முன்னால் வைப்பார்கள். இந்தியை எல்லாப் பள்ளிகளிலும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தாயிற்று. இன்னமும் கற்றுக் கொள்ளாதது மாணவர்களின் தவறு. அவர்கள் படிக்கும் மொழியில் இருந்துதான் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முட்டாள் மாணவர்களுக்காக அரசின் கொள்கையை மாற்றிக் கொள்ளக் கூடாது. அறிவிருக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கவே தேர்வுகள். அறிவில்லாத மாணவர்களுக்காகப் போராடுவது சட்டத்திற்கு எதிரானது என்பதாக வாதங்கள் வைக்கப்படும். அப்பொழுதும் இதெல்லாம் சரிதானே என்று தோன்றும். நன்றாகப் படித்துப் பாருங்கள். பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்பட்ட மொழியில் இருந்துதானே கேள்வி கேட்கிறோம் என்பதை எப்படி எதிர்க்க முடியும்? படிக்காதது யார் தவறு என்ற கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வீர்கள்? எளிமையாக உங்களைச் சோம்பேறி என்றும், சட்டத்தை எதிர்க்கும் போராளி என்றும் கூறிவிட முடியும். இத்தனைக்கும் நாம் நம் சொந்த நாட்டில், சொந்த மொழியில் என் தேர்வுகளை எழுதவும், போட்டித் தேர்வுகளில் பங்கேற்கவும் விரும்புகிறேன் என்கிற அடிப்படை உரிமையையே சட்டத்திற்கு எதிரானது என்பதாக உருவாக்க முடியும்.

ஆயிரம் ஆண்டுகளாக ஒரு மொழியைப் பயின்று, அதைப் பேசி வரும், அந்தச் சுற்றத்தில் வாழும் ஒரு மாணவனும், ஒரு சில வருடங்களாக இந்தியை வெறும் பாடப்புத்தகங்களில் மட்டும் படிக்கும் மாணவனும் ஒரே தேர்வெழுதி அதில் திறமையை நிரூபித்தல் என்பது எந்தவகையிலும் அறம் ஆகாது இல்லையா? சரி, இதெல்லாம் ஒரு பேச்சுக்குத்தான, நிஜமாவே எந்த அரசும் இப்படிச் செய்யாது என்று தோன்றலாம். அப்படியே வைத்துக் கொள்வோம். நானும் அப்படியே நம்புகிறேன்.

சரி, ஒரு மூன்றாம் மொழியாக இந்தியைக் கற்றுக் கொள்ளலாம் தானே, ஏன் எதிர்க்க வேண்டும் என்கிற கேள்விக்கு வரலாம். பெருவாரியான மக்கள் பேசும் மொழி என்பதும், வடக்கிந்தியா முழுவதும் பேசுகிற மொழி என்கிற தர்க்கமும் நியாயமானதுதான். இந்தியைக் கற்றுக் கொள்வதை இப்பொழுது வரையிலும் யாரும் எதிர்க்கவே இல்லை என்பது முதலில் புரிந்து கொள்ள வேண்டியது. அதனைக் கல்விக் கூடங்களில் கட்டாயப் பயிற்று மொழியாக, அரசு அலுவலங்களில் இன்னொரு மொழியாக சேர்ப்பதைத்தான் எதிர்க்கிறார்கள். காரணம் எளிமையானதுதான். கல்வி என்பது மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும். கிட்டத்தட்ட எல்லா முன்னேறிய தேசங்களுமே தாய்மொழி வழியிலான கல்வியைத்தான் ஆதரிக்கிறார்கள்; கடைப்பிடிக்கிறார்கள். உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டுமானால், தமிழிலேயே எல்லாமும் இருக்குமானால் நமக்கு ஆங்கிலம் கூட அவசியமில்லை தான். ஜெர்மானியர்களைப் போல, ரஷ்யர்களைப் போல எல்லா தொழில்நுட்பமும் தாய்மொழியிலேயே கற்றுக் கொள்ளும் வசதியிருப்பின், எக்ஸ்ட்ராவாக இன்னொரு மொழியின் தேவையே நமக்கு இல்லை. உலகோடு தொடர்புகொள்ள மட்டும் ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம். இங்கேயும் திரும்பவும் ஆங்கிலம் தான் தேவையாக இருக்கிறதே ஒழிய இந்தியோ, வேறு வடக்கிந்திய மொழிகளோ அல்ல.

யாரும் தாமாகப் போய் எதையும் கற்றுக் கொள்ள மாட்டார்கள், அரசுதான் கற்றுத் தர வேண்டும். அதைப் பள்ளியில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்றும் தோன்றலாம். இங்கே இந்தி கற்றுத் தந்து, அதில் தேர்வெழுதுவதில் ஏற்படும் பிரச்னைகளையும் கணக்கில் கொள்வது அவசியமாகிறது. ஏற்கெனவே நாம் ஆங்கிலத்தைத் திக்கித் திணறிக் கற்றுக் கொண்டிருக்கிறோம். அது அத்தியாவசியம் என்றாலும் அது சுமைதான். இதன் பொருள் சோம்பேறித்தனமோ, கற்றுக் கொள்வதில் இருக்கும் ஆர்வமின்மையோ அல்ல. நமக்குத் தொடர்பே இல்லாத ஒன்றை உள்வாங்குவதில் இருக்கும் பிரச்னைகளைச் சொல்கிறேன். பிதாகரஸ் தேற்றத்தையோ, ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தையோ நாம் எளிமையாக விளங்கிக் கொள்ளலாம். அதெல்லாம் இயற்பியல். கணிதவியல். அவையெல்லாம் நம் வாழ்வோடு தொடர்புள்ளவை. அவற்றை அன்றாடம் பார்க்கிறோம். ஆனால், ஒரு மொழியானது அப்படி அல்ல. அதன் தேவை தொடர்பு கொள்வது மட்டும் தானே தவிர வேறெந்த அவசியமும் அதற்கு இல்லை. அது ஐந்தாயிரம் வருட தமிழானாலும், மூன்றாயிரம் வருட இந்தியானாலும் ஒன்றுதான். அறிவுக்கும் மொழிக்கும் தொடர்பில்லை. தொடர்பு கொள்ளல் என்பதற்கும், வேலைவாய்ப்பு, பொருளாதார அடிப்படையிலான முன்னேற்றம் என்பதற்காகவும் தான் நாம் கற்றுக் கொள்கிறோம். இதில் ஆங்கிலம் முக்கியமா இந்தி முக்கியமா என்ற கேள்வி வருமாயின் கண்ணை மூடிக் கொண்டு ஆங்கிலத்தைத் தான் தேர்ந்தெடுக்க முடியும். ஏனென்றால், நாம் ஆங்கிலத்தை விடுத்து இந்தியைக் கற்றுக் கொள்கிறோம் என்று கொண்டால், அவர்கள் ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தை ஆங்கிலத்தில் இருந்து இந்திக்குக் கொண்டுவந்து அங்கிருந்து தமிழுக்கு கொண்டு வர வேண்டியிருக்கும். இதற்கு நேராக ஆங்கிலத்தில் நாமே படித்துக் கொள்ளலாமே என்பது தான் தர்க்கம்.

சரி, இந்தி படித்தால் ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டாம் என்று யார் சொன்னார்கள் என்று கேட்கத் தோன்றும். சரியான கேள்விதான். இப்பொழுதுதான் படிக்கவே வந்திருக்கிற பெரும்பாலான மக்களிடம் இந்தியை ஒரு கட்டாயப் பாடமாகத் திணிப்பது அவர்கள் மேலும் மிரட்சி கொள்ளவே வழிவகுக்கும். யோசித்துப் பாருங்கள்; ஆங்கிலம் அல்லாது இந்தியை மட்டும் படித்துத் தெளிவதில் எந்தவிதமான நன்மையும் இல்லை. நாம் இந்தி படித்தாலும் படிக்காவிட்டாலும் ஆங்கிலம் படித்துத்தான் ஆக வேண்டும். சிரமப்பட்டுக் கற்றுக் கொள்வது என்பது வேறு. அத்தனை சிரமப்பட்டு ஒன்றைக் கற்றுக் கொள்வதால் விளையும் நன்மைகள் என்ன? பெரும்பான்மைக்கு எந்தவிதத்திலும் பெரும் நன்மைகளைத் தராத ஒரு மொழியை ஏன் கட்டாயமாக ஏற்க வேண்டும் என்பதுதான் இங்கே கேள்வி. இந்தி படிக்காமல் என் வாழ்க்கை வீணாகிவிட்டது என்று நினைப்போர் நிச்சயமாகத் தனியாகப் படித்துக் கொள்ளலாம் தானே? அவர்களை யார் இங்கே எதிர்க்கிறார்கள்?

இந்தித் திணிப்பை எதிர்த்தது நாம் பாராட்ட வேண்டிய சமூக நீதி முன்னெடுப்பு என்பதை முதலில் புரிந்து கொள்வது அவசியம். 1970 களில் ஒருவேளை இந்தியாவில் இருக்கும் எல்லா மாநிலங்களும் இந்தியை கட்டாயமாகக் கற்க வேண்டும் என்கிற முடிவு எட்டப்பட்டிருக்குமாயின், இப்பொழுது நிச்சயமாக மத்திய அரசின் எல்லா அலுவல்களும், மத்திய அரசின் தேர்வுகளும் இந்தியிலேயே நடத்தபடுகின்ற சூழலுக்கு வந்திருக்கும். எப்படியாயினும், நமக்கு நானூறு வருட ஆங்கிலம் எப்படி இத்தனை நாட்களாகப் புரிபடாமல் இருக்கிறதோ அதே போலத்தான் இந்தியும் இருந்திருக்கும். அதாவது, இந்தி பேசாத மாநிலங்களுக்கு அது பெரும் மொழித் தடையாகத்தான் இருந்திருக்கும். அந்தச் சூழலில் மத்திய அரசின் எல்லாப் பணிகளிலும் இந்தி தெரிந்த, இந்தியை முதன்மை மொழியாகக் கொண்ட மாநிலத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே இருந்திருப்பார்கள்.

நம் மக்கள் சாதாரணமாக, இந்தி ஒரு மொழி என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல், ”அறிவிருக்கறவன் பரீட்சைல பாசாகி வேலைக்குப் போறான், உனக்கு பொறாமை அதான் அவனைக் குறை சொல்லிட்டு இருக்க” என்பதாக முடித்துக் கொள்வார்கள். வேலை வாய்ப்பை வழங்காத ஒரு கல்வியை ஏன் கற்க வேண்டும் என்று ஒரு பெரும்பான்மை நிச்சயமாக படிக்கவே வரமாட்டார்கள். மிக மிகச் சிரமப்பட்டுத்தான் நாம் நம் அடித்தட்டு மக்களைப் படிக்க அழைத்து வருகிறோம். இதெல்லாம் எலைட்டிச மனப்பான்மையில் இருந்து பார்த்தால் புரியாது. எட்டாம் வகுப்பு வரையிலும் எல்லோரும் தேர்ச்சி என்பது எல்லோரையும் திறன் குறைந்தவர்களாக மாற்ற வேண்டும் என்கிற நோக்கில் அல்ல. நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பில் தேர்வு பெறாத இளம் குழந்தைகளை, அந்தத் தோல்வியைக் காட்டி, அவனை எதேனும் மெக்கானிக் ஷெட்களில் வேலைக்கு விட்டுவிடக்கூடாதே என்கிற அக்கறைதான். அறிவுக்கும் சமூக நீதிக்கும் இருக்கும் இடைவெளியைப் புரிந்து கொள்ளுங்கள். வேலைவாய்ப்பு, கல்வி இவைகள்தான் ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு அவசியமானவை என்றால் அந்த தேசத்தின் எல்லா மக்களுக்கும் அதில் பங்கேற்கும் உரிமை இருக்க வேண்டும். அந்த உரிமையை நேரடியாகப் பறிக்க முடியாத நிலையில், இப்படி நமக்குத் தொடர்பல்லாத ஒரு மொழியின் மூலமாகப் பறிப்பதும் அநீதி தான்.

இந்தித் திணிப்பை எதிர்ப்பது ஏதோ பொழுதுபோக்காகவோ, அரசியல் காரணங்களுக்காகவோ என்று நினைப்பது அறியாமையின் உச்சம். அது அடிப்படை உரிமைகளைப் பறிக்க நினைக்கும் ஒரு அரசின் தவறினைச் சுட்டிக்காட்டும் போராட்டம். நம் நாட்டில், நம் மொழியில் படிக்கவும், தேர்வெழுதவும் நமக்கு உரிமைகள் உள்ளன. அதனைக் காப்பதற்கான எதிர்ப்புக்குரல்கள் தான் இந்தித் திணிப்பை எதிர்ப்பது. ஏன் தேர்வெழுதுதல் வரைக்கும் போக வேண்டி இருக்கிறது என்றால், அதன் நீட்சி அப்படி இருக்கலாம் என்பதால் தான். இந்தித் திணிப்பை எதிர்ப்பதால் தமிழகம் மட்டும் நன்மை பெறவில்லை. இந்தி பேசாத ஏனைய மாநிலத்தின் உரிமைகளுக்கும் சேர்த்தே தான் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நமக்குத் தெரிந்த மொழியில் நம் அரசு செயல்படுவது நம் அடிப்படை உரிமை. அந்த உரிமையைக் காக்கத்தான் குரல் கொடுக்கிறார்கள். நமக்குத் தமிழ் தான் தெரியும் என்பதற்காக நாம் மத்திய அரசும் தமிழிலேயே இயங்க வேண்டும் என்று சொல்லவில்லை. இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ளுங்கள்.

இந்தியா என்கிற இந்த தேசத்தின் அழகியல் என்பதே அது ஒற்றைத் தேசியம் இல்லை என்பது தான்.  ஒரே மொழி பேசுகிற மக்கள் என்கிற அடையாளமோ, ஒரே மதத்தைப் பின்பற்றுகிற மக்கள் என்கிற அடையாளமோ இல்லாமல் ஒரு நாடாக இணைந்திருப்பதன் அழகியல் உலகில் வேறெங்கும் காணமுடியாது. இதனைப் புரிந்து கொள்வோம். இந்தி கற்பதால் தான் நம் வாழ்க்கை மேம்பாடடையும் என்று நம்புகிற எவரும் இப்பொழுதே இந்தி கற்கத் துவங்குங்கள். தமிழைப்போல, ஆங்கிலத்தைப் போல அதுவும் ஒரு மொழி. ஆனால், அதனை எல்லோரும் கற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்பதில் இருக்கும் வன்முறையையும் புரிந்து கொள்ளுங்கள்!

Tuesday, October 6, 2015

டாலர் தேசம்

"கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்கா ஜப்பானின் மீது அணுகுண்டினை வீசியது. பில்கேட்ஸ் மைக்ரோசாஃப்டை நிறுவினார். ஒசாமா பின்லேடன் இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்தார்." ஒரு ட்விட்டில் அடங்கிவிடக்கூடிய இவைதான் டாலர் தேசம் புத்தகத்தைப் படிக்கும் முன்பாக எனக்குத் தெரிந்த அமெரிக்காவின் வரலாறு.

"அமெரிக்கா உலகின் தன்னிகரற்ற ஒரே வல்லரசு. பூலோக சொர்க்கம். அங்கே மட்டும்தான் மாதம் மும்மாரி பொழிகிறது. அமெரிக்காவில்தான் சொர்க்கத்திற்கு டிக்கெட் கிடைக்கும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஒருமுறையேனும் அமெரிக்காவிற்குப் போய்விட்டு வருவதுதான் பிறப்பின் அர்த்தம்." இதெல்லாம் என்னைச் சுற்றிலுமுள்ளோரின் அமெரிக்கப் புரிதல்கள். 

அதெப்படி ஒரு தேசம் உலகெங்கிலுமுள்ளோரின் ஒரே விருப்பத் தேர்வாக இருக்கிறது? வெறும் 500 வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்காவால் எப்படி இந்த மாபெரும் வளர்ச்சியை எட்டமுடிந்தது? அதற்குப் பின்னாலிருக்கும் உழைப்பு யாருடையது? அந்த தேசத்தின் மக்களின் உழைப்பா அல்லது ஆட்சியாளர்களின் அதிபுத்திசாலித்தனமான நடவடிக்கைகளா ? ஆப்பிரிக்க அடிமைகளின் உழைப்பினால்தான் அமெரிக்காவின் பொருளாதாரம் பெருமளவில் வளர்ந்ததா? இந்தியர்களுக்கும் அமெரிக்காவின் பூர்வ குடிகளுக்கும் யாதொரு தொடர்புமில்லாதிருக்கும்போது ஏன் அவர்களைச் செவ்விந்தியர்கள் என்று அழைக்கிறார்கள்? இது தவிரவும் நமக்கிருக்கும் அமெரிக்கச் சந்தேகங்களுக்கு விடை சொல்கிறது டாலர் தேசம்.

பொதுவில் நமக்குத் தெரிந்த பளபளக்கும் அமெரிக்காவின் பின்னால் இருக்கும் அழுக்குகள், அது எதிர்கொண்ட பிரச்சினைகள், தடுமாறித் தலைகுப்புற விழுந்து முகம் பெயர்த்துக் கொண்ட சம்பங்கள் என்று நமக்குத் தெரியாத, நாம் நினைத்துப் பார்த்திராத மொத்த அமெரிக்காவின் வரலாற்றையும் அமெரிக்கா உலகின் வல்லரசான அதே ஜெட் வேக எழுத்து நடையில் வாசிக்கமுடிகிறது.

இரண்டாம் உலகப்போர் காலங்களில் அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டுகளை வீசித் தனது முதல் அணு ஆயுதத்தைப் பரிசோதித்தது. மனிதத் தன்மையற்ற செயலென்று இன்று வரையிலுமே உலக நாடுகள் பேசிவரும் இந்தக் கொடூரத்திற்கு ஜப்பான் நிகழ்த்திய பெர்ல்-ஹார்பர் துறைமுகத் தாக்குதல்தான் காரணமென்று புரிந்து கொண்டிருந்தேன். ஆனால், ஜப்பானின் தொழில் புரட்சியும், அது அடைந்துவந்த பொருளாதார முன்னேற்றமும், அதனால் அமெரிக்கா அடைந்த இழப்புகளுமே இதற்குக் காரணமென்று தெரிந்தபோதுதான் மேலோட்டமாக நாம் புரிந்து வைத்திருப்பவையெல்லாம் வரலாறுகளே இல்லையென்று தெரிகிறது.


நேரடியாக Sound Cloudல் கேட்க : டாலர் தேசம்

அமெரிக்க - ரஷ்ய பனிப்போர் காலங்களில் எப்படி இந்த இரண்டு வல்லரசுகளின் "யார் பெரியவன்?" என்கிற சண்டைக்கு சின்னச் சின்னத் தேசங்களும், அதன் மக்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டார்கள் என்பதையும், குறிப்பாக வியட்நாம் போரின்போது அமெரிக்க மக்களின் மனநிலை எப்படி அரசுக்கு எதிரானதாக இருந்தது என்பதையும், அமெரிக்காவிற்கு எந்த அளவிலும் சமமில்லாத வியட்நாம் எப்படி அமெரிக்காவிற்கு எதிராக சுமார் 20 ஆண்டுக்காலம் போராட முடிந்தது என்பதும், வியட்நாமியர்களின் தேசத்தந்தையாகப் போற்றப்படும் ஹோசிமீன் எவ்வாறு அமெரிக்காவுக்கு எதிரான வியட்நாமியர்களின் யுத்தத்தை ஒருங்கிணைத்தார் என்பதும் ஆச்சர்யமான வரலாறு.

ஆப்கன் யுத்தம் குறித்தும், வளைகுடா யுத்தம் குறித்தும், சதாம் உசேன் மீதான யுத்தம் குறித்தும் அமெரிக்கா உருவாக்கியிருக்கும் பொய்கள் என்னென்ன, உண்மையில் யுத்த காலங்களில் எவ்விதம் ஊடகங்களும், செய்தி நிறுவனங்களும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, அமெரிக்கச் சார்புச் செய்திகள் மட்டுமே உலகிற்குத் தெரிவிக்கப்பட்டன என்பதும் அமெரிக்காவைக் குறித்து எனக்குள் இருந்த பிம்பத்தை உடைத்தெறிந்தது.

க்யூபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் பிடிவாதம்தான் அமெரிக்காவின் எதிரி நாடாக க்யூபா உருவானதற்குக் காரணமென்று இதுவரையிலும் நினைத்திருந்த எனக்கு, எந்த நிலையில் பிடல் காஸ்ட்ரோ அமெரிக்காவிற்கு எதிரான நிலையினை எடுத்தார் என்றும், அமெரிக்காவுடன் இணக்கமான உறவைப் பேன நினைத்திருந்த பிடல் காஸ்ட்ரோவை எவ்விதமாக அமெரிக்காவின் நிரந்தர எதிரியாக அமெரிக்காவே உருவாக்கியது என்பதும் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஐநூறு ஆண்டுகளில் அமெரிக்கா அடைந்திருக்கும் உயரங்களுக்கும், அதன் அறிவியல் பொருளாதார வளர்ச்சிக்கும் அதன் அரசியல் தலைவர்கள் எவ்விதமாக வழிநடத்தினார்கள், உலகின் தன்னிகரற்ற ஒரே வல்லரசு என்கிற நிலையை அடைவதற்கு அந்த தேசம் செய்த போர்கள், சூழ்ச்சிகள், ஆட்சிக்கவிழ்ப்புகள் என்னென்ன என்பது குறித்தும், அறிவியல் வளர்ச்சிக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும், அது எவ்விதமாக உலக முதலீட்டாளர்களை ஈர்த்தது என்பது குறித்தும் விரிவாகத் தெரிந்து கொள்ள நிச்சயமாக டாலர் தேசம் உதவும் என்பதில் சந்தேகமில்லை.

ஆசிரியர் : பா.ராகவன்.
பதிப்பகம் : கிழக்கு.
ஆன்லைனில் வாங்க : டாலர் தேசம்.



Sunday, July 19, 2015

எனது இந்தியா



சாதிச் சண்டைகளும், சாதிப் பாகுபாடுகள் சார்ந்த கொடூரக் கொலைகளும் தினசரிச் செய்திகளாகிவரும் சமகாலத்தில் எளியவர்கள் மீது வலியவர்களுக்கு இருக்க வேண்டிய கரிசனம் குறித்துப் பேச எந்த அருகதையும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆங்கிலேயர்களைக் குறித்து நம் இந்தியச் சமூகம் ஏற்படுத்தியிருக்கும் பிம்பத்திற்கு முற்றிலும் மாறாக ஒரு பிம்பத்தை என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது ஜிம் கார்பெட்டின் எனது இந்தியா. எண்ணற்ற சாதிய அடுக்குகளைக் கொண்ட இந்திய மண்ணில் இந்தியாவின் உண்மையான ஏழை, எளிய மக்களோடு வாழ்ந்த தனது அனுபவங்களை ஆங்கிலேயர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு 1952 ஆம் ஆண்டு வெளியான இப்புத்தகத்தினைத் தமிழில் யுவன் சந்திரசேகர் மொழிபெயர்த்துள்ளார். "இந்தியாவின் ஏழை ஜனங்களாகிய என் நண்பர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்" என்று பெருமிதமாகக் கூறும் ஜிம் கார்பெட் தனது காலத்திய இந்திய மக்களையும், வாழ்க்கை முறையையும் மிகத் தத்ரூபமாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார்.

புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இழைந்தோடும் தோழமை உணர்வும், அன்பும், எளிய மனிதர்களின் வாழ்க்கை மீது அவர் கொண்டிருந்த கருணையும் கண்ணீரையும், இனம் புரியாத சிலிர்ப்பையும் ஏற்படுத்திச் செல்கிறது. 1875 ஆம் ஆண்டு இமயமலைப் பிரதேசத்தின் உத்ரகாண்ட் மாநிலத்தின் நைனிடாலில் பிறந்த ஜிம் இந்தியா சுதந்திரமடையும் வரையிலும் இந்தியாவில் வசித்தார். உத்ரகாண்டின் குமாவுன் பகுதியில் இருந்த ஆட்கொல்லிப் புலிகளை வேட்டையாடி கிராமத்தின் பாதுகாவலராகத் திகழ்ந்த அதே சமயத்தில் வேட்டையின்பத்திற்காக உயிர்களைக் கொல்லாத ஒப்பற்ற நேர்மையுணர்வு கொண்டவராகவும் வாழ்ந்திருக்கிறார்.





நேரடியாக சவுண்ட் கிளவுடில் கேட்க : எனது இந்தியா

இந்தியாவின் பெரும்பான்மையினரான ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை அறவுணர்வையும், விசுவாசத்தையும் மெச்சும் ஜிம் கார்பெட் தன் வாழ்வில் மறக்கவியலாத சம்பவங்களையும், மனிதர்களையும், நெகிழ்ச்சியான தருணங்களையும் மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளார். சுமார் இருபது வருடங்கள் வடமேற்கு ரயில்வேயின் சரக்குப் போக்குவரத்து ஆய்வாளராகப் பணியாற்றிய ஜிம் கார்பெட் "எங்கள் ஜனங்கள்", "என் மக்கள்" என்று இந்திய மக்களைப் பற்றி எழுதும்போது தேசம், மொழி போன்ற பிரிவினைகளுக்கு அப்பாற்பட்டு நிற்கும் மனித நேயத்தினை நாம் உணரமுடிகிறது.

எனது இந்தியா என்ற இந்த அனுபவக் குறிப்புகளில் மிக முக்கியமாக என்னைப் பாதித்த அம்சம் இதன் இலக்கியத் தரமான எழுத்து நடைதான். வாசிக்க வாசிக்க ஒவ்வொரு பக்கத்திலும் ஊற்றெடுக்கும் அன்பும், பாசமும், கருணையும் ஒருபக்கமிருக்க தன் வாழ்வில் தொடர்புடைய ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் ஜிம் விவரித்த விதம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 

பெரும்பாலான என்பதை விடவும் எல்லாக் கட்டுரைகளுமே ஒருவித நெகிழ்ச்சியான சம்பவங்களையே மையமாகக் கொண்டிருப்பதால் நம்மையும் அறியாமல் அழ நேர்வதை எப்பாடுபட்டும் கட்டுப்படுத்த முடிவதில்லை. தொடர்ந்து நான்கைந்து தடவைகள் வாசித்தாலும் ஒவ்வொரு வாசிப்பின் போதும் அழவும், அதே சமயத்தில் மனித வாழ்க்கையின் அடிப்படையான மனிதநேயம், கருணையுணர்வு போன்றவை குறித்து ஆழமாகச் சிந்திக்கவும் வைக்கிற புத்தகமாக எனது இந்தியா விளங்குகிறது. 

யுவன் சந்திரசேகரின் மொழிபெயர்ப்பு இது ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தகம்தானா என்ற சந்தேகத்தை எழுப்புமளவிற்கு மிக நேர்த்தியாக மொழியாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

புத்தகம் : எனது இந்தியா
ஆசிரியர் : ஜிம் கார்பெட்.(ஆங்கிலம்)
தமிழாக்கம் : யுவன் சந்திரசேகர்.
பதிப்பகம் : காலச்சுவடு.
விலை : 200.

ஆன்லைனில் வாங்க

ஆங்கில மூலம் :   MY INDIA


Thursday, April 2, 2015

மதில்கள்

உயிரோட்டமான கதை எப்படியிருக்கும்? அப்படி உயிரோட்டத்துடன் எழுதப்பட்ட கதையையோ நாவலையோ வாசிக்கும்போது ஏற்படும் உணர்வுகள் எப்படியிருக்கும்? அப்படியாக அதன் ஒவ்வொரு பக்கத்திலும் அன்பினையும், காதலையும் நிரப்பி எழுதப்பட்ட ஒரு கதையைப் பற்றிய மதிப்புரைதான் மதில்கள் மதிப்புரை.



மலையாள இலக்கிய உலகின் மிக முக்கியப் படைப்பாளியான வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மதிலுகள் என்ற குறுநாவலினைத் தமிழில் மதில்கள் என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார் சுகுமாரன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவல், சிறைச்சாலையில் உணர்வும், உயிருமற்ற மதில்கள் இடைநிற்க அதனைத் தாண்டி வளரும் காதலினை மையமாகக் கொண்டது.

சுதந்திரப்போராட்டக் காலத்தில் அரசுக்கு எதிராகச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இரண்டாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு மத்திய சிறைச்சாலைக்கு வருகிறார் பஷீர். 

சிறைச்சாலைக்குள் நுழைகின்றபோதே பெண்ணின் வாசனையை உணர்ந்துகொள்ளும் பஷீர் அது எங்கிருந்து வருகிறதென்று காவலரிடம் கேட்க, பெண்கள் சிறைச்சாலையிலிருந்து வருவதாகவும், அதற்கு அருகில்தான் பஷீரின் சிறையும் இருப்பதாகவும் கூறுகிறார். சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் ஓரிரு முறைகள் காற்றில் சுவாசம் பிடித்துப் பார்த்தும் பெண்ணின் வாசனையை அவரால் அடையாளம் காணமுடியாமல் போகிறது. பிறகு, அதனை மறந்தும்விடுகிறார்.



Sound cloudல் நேரடியாகக் கேட்க மதில்கள்!

சிறைச்சாலைக்குள் வந்ததிலிருந்து அவருக்கும் மற்ற கைதிகள், சிறைக்காவலர்கள், அதிகாரிகள் என எல்லோருக்கும் ஏற்படும் பிரியத்தினைப் பற்றியும் வெகு இயல்பாகச் சித்திரத்திருக்கிறார். ஏற்கெனவே பலமுறை சிறைவாசம் அனுபவித்திருந்தாலும் இந்தமுறை சிறைவாசம் இலக்கியத்திற்கானதென்று ஆரம்பத்திலேயே கூறிக் கொள்வதாலோ என்னவோ நாவல் முழுவதிலும் எல்லோர் மீதும் அன்பினை அள்ளித் தெளித்திருக்கிறார். என்னைப் பொருத்தவரையிலும் இவையெல்லாம் கதையின் ஆரம்பக்கட்டம் மட்டுமே. 

சிறையிலிருக்கும் எல்லாக் கைதிகளுக்கும், காவலர்களுக்கும் பஷீரின் மீது பெரும் ப்ரியம் ஏற்பட்டிருக்கும் சூழலில் பஷீருடன் இருந்த மற்ற அரசியல் கைதிகள் விடுதலையாகிச் செல்கின்றனர். அந்தச் சமயத்தில் பஷீர் மட்டும் தனியே சிறைவாசம் அனுபவிக்க நேர்கிறது. உலகமே சூன்யமாகிப் போனதாகக் கற்பனை செய்துகொண்டு, சிறையிலிருந்து தப்பிக்க நினைத்துச் சிற்சில யோசனைகளைச் செய்து கொண்டே, தனிமையில் மரங்களுடனும், அணில்களுடனும் பேசவும், சீட்டியடிக்கவும் செய்கிறார். 

சீழ்க்கைச் சத்தத்தினைக் கேட்டதும், சிறைச்சாலையின் மதிற்சுவரின் மறுபக்கத்திலிருந்து பெண்ணின் குரல் வருகிறது. " யாரு அங்கே சீட்டியடிக்கிறது?" என்ற கேள்வியைத் தொடர்ந்து வரும் உரையாடல்கள்தான் நாவலினைத் திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டுகிறது.

பெண்கள் ஜெயிலிலிருக்கும் நாராயணிக்கும் பஷீருக்கும் இடையே இருக்கும் மதிலினைத் தாண்டி காதல் மலர்கிறது. இவர்களின் காதலுக்குச் சாட்சியாகவும், அதே சமயத்தில் பெரும் எதிரியாகவும் இந்த மதில் நிற்கிறது. நாவலின் பக்கங்கள் நகர நகர எங்கே இவர்களின் காதலால் இந்த மதில் உயிர்பெற்றுப் பெயர்ந்து விழுந்துவிடுமோ என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது.

நாராயணியின் நுழைவிற்குப் பிறகுதான் மதில்கள் நாவலே பெரும் கவர்ச்சிக்குள்ளாகிறது. நாராயணியின் வரவுக்குப் பிறகுதான் பஷீரும் கூடத் தனது சிறையினைச் சுத்தம் செய்கிறார். 

"எனக்கொரு ரோஜாச் செடி குடுப்பீங்களா? ", " இன்னிக்கு உங்களுக்காக அழுவேன்", " நாம தூரத்திலே நின்னாவது ஒருதடவை பார்த்தாப்போதும் " என்ற உரையாடல்களில் புத்தகத்திற்குள்ளாகவே ஒரு திரை உருவாகி, அதில் பஷீரும், நாராயணியும், இடையே இடைஞ்சலாய் நிற்கும் மதிலும் திரும்பத் திரும்ப வந்துபோய் காதலின் மென் சோகத்தினை நமக்குள் பரவச் செய்கின்றன.

நாராயணிக்கும் பஷீருக்குமான உரையாடல்கள் மொத்தத்திலும் காதல் நிரம்பிவழிகிறது. நாராயணிக்குக் கொடுப்பதற்கு முன்பாக பஷீர் அந்த ரோஜாச் செடியின் ஒவ்வொரு தளிருக்கும், ஒவ்வொரு பூவுக்கும், ஒவ்வொரு இலைக்கும் முத்தம் கொடுக்கும் காட்சிதான் நாவலின்/காதலின் உச்ச நிலை. 

பெண்ணிற்காக ஏங்கும் ஆணும், ஆணிற்காக ஏங்கும் பெண்ணும், எதுவுமறியாமல் இடையில் நிற்கும் மதிலும் நமக்குள் ஏற்படுத்தும் உணர்வுகள் வார்த்தையில் வடிக்கவியலாதவை. நேரில் சந்திக்கவிரும்பி, அதற்காகத் திட்டமிட்டு, அந்த நாளுக்காகக் காத்திருந்து, அந்த நாளுக்கு முன்னதாகவே பஷீருக்கு விடுதலைகிடைத்துவிட " ஒய் ஷுட் ஐ பி ஃப்ரீ? ஹூ வான்ட்ஸ் ஃப்ரீடம்?" என்று ஜெயிலரிடம் கேட்கும் கேள்வி நியாயமாகவே தோன்றுகிறது. 

நான் வாசித்த புத்தகங்களில்/ காதல் கதைகளில் பஷீரின் மதில்கள் எப்பொழுதும் பசுமையாகவே நினைவிலிருக்கும். நாவலின் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கும் பழவிள ரமேசனின் " மதில்களின் பணிமனை" மற்றும் அடூர் கோபாலகிருஷ்ணனின் " வாக்கும் நோக்கும்" இரண்டு கட்டுரைகளும் மதில்கள் நாவலுக்கு மிக முக்கியமான கட்டுரைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் : வைக்கம் முகம்மது பஷீர். ( மலையாளம்)
தமிழாக்கம் : சுகுமாரன்.
பதிப்பகம் : காலச்சுவடு.
விலை : ரூ.65

ஆன்லைனில் வாங்க :      

Monday, January 26, 2015

இரவு - எலீ வீசல்

ஒரு ஊரில் ஒரு எல்சூனியா வாழ்ந்தாள்.
அவள் சிறுமி.
ஒருநாள் யாருமற்று அவள் இறந்துபோனாள்.
அவள் அப்பா மஜ்டானெக்கில்.
அவள் அம்மா ஔஷ்விற்சில்.

(மேற்கண்ட கவிதை காலச்சுவடு ஜூலை 2014 இதழில் பிரசாந்தி சேகர் அவர்கள் எழுதிய ஔஷ்விற்ஸ் கவிதைகள் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது)

உலகின் மிகப் பண்பட்ட மக்களைக் கொண்ட தேசங்களாகப் போற்றப்படும் ஐரோப்பியர்களின் இனவெறிப் போராட்டத்தினை யாரும் மறந்திருக்கமுடியாது. சுமார் 70 வருடங்களுக்கு முன்னதாக இரண்டாம் உலகப் போர் துவங்கி முடியும் வரையிலும் (1941 - 1945) ஐரோப்பாவில் இருந்த யூத மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் - 60 லட்சம் பேர் - ஹோலோகஸ்ட் என்னும் அழித்தொழிப்பு முறையினால் தகன உலைகளிலும், விஷவாயுக் கூடங்களிலும் கொல்லப்பட்டனர். ஹிட்லர் தனது பிரசங்கங்களின் மூலமாக  இனவெறியை மக்களிடம் தூண்டிவிட்டதுடன் ஆரியர் அல்லாத யூதர்கள், ரோமானியர்கள், போலந்துக்காரர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆகியோர் முற்று முழுதாக ஐரோப்பாவில் இருந்து அழிக்கப்பட வேண்டுமென ஆடிய பேயாட்டம் ஒரு கோடிக்கும் மேலான அப்பாவி மனித உயிர்களைப் பலி வாங்கியது.


நேரடியாக sound cloud ல் கேட்க இங்கே தொடவும்.

தனது பதினைந்தாவது வயதில் தனது சொந்த ஊரிலிருந்து ஆஸ்விட்ஸ் வதை முகாமுக்கு நாடு கடத்தப்பட்டத்திலிருந்து, புனா மற்றும் புச்சன்வால்ட் வதை முகாம்களில் தானும் தனது குடும்பமும் எதிர்கொண்ட கொடுமைகளை சுயசரிதையாக எழுதியுள்ளார் எலீ வீசல். ஆஸ்விட்ச் வதை முகாமில் தன் கண்ணெதிரிலேயே தனது தாயும், இளைய சகோதரி ஜிபோராவும் தகன உலைக்கு எரிபொருளாவதைக் காண நேர்ந்ததது முதல் தனது தந்தையின் மரணத்தை எதிர்பார்க்கும் அளவிற்கு ஆன்மா அழிந்துபோய் ஒரு வயிராக, பசியெடுக்கும் வயிராக மட்டுமே வாழ்ந்த நிஜத்தையும் வார்த்தைகளாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாஜிப் படையினரின் இன அழிப்புப் பேயாட்டத்தினை இரவு புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் உணரமுடிகிறது. கற்பனையும் செய்ய முடிந்திராத அளவிற்கு மனிதர்களுக்குள் இத்தனை வன்மம் இருக்கமுடியுமா என்ற கேள்வியும் அடுத்தடுத்த பக்கங்களில் அதனை விடக் கொடூரமான சம்பவங்களைப் படிக்க நேரும்போது இதனை நிகழ்த்தியவர்கள், நிகழக் காரணமாயிருந்தவர்கள் என எல்லோருமே மனிதர்களாகவே இருக்கமுடியாதென்ற வெறுப்பும், பயமும் நம்மைப் பற்றிக் கொள்கிறது.

தகன உலைகளில் உயிருடன் மனிதர்களைப் போடுவது, குழந்தைகளை மேலே வீசியெறிந்து சுட்டு வீழ்த்துவது, விஷவாயுக் கூடங்களில் மனிதர்களை அடைத்துக் கொல்வது, பட்டினியால் இறக்க விடுவது, கடும் குளிரில் நிர்வாணமாக நெடுந்தொலைவு நடக்கவிடுவது, நடக்க இயலாதவர்களைச் சுட்டு வீழ்த்துவது, கால்நடைகளை ஏற்றிக் கொண்டு செல்லும் ரயிலில் மிக நெருக்கமாக மனிதர்களை அடைத்து வைத்து தொடர்ந்து பயணம் செய்ய வைப்பது, நெரிசலில் இறந்தவர்களை அங்கங்கே வயல்வெளிகளில் வீசிவிட்டுப் பயணத்தைத் தொடர்வது என்பதாக நாஜிப் படைகள் செய்த கொடுமைகள் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. ஒரே வாசிப்பில் இந்த நூலினைப் படித்து முடித்துவிடுவதென்பது அசாதாரணமானது. பக்கங்கள் குறைவுதானென்றாலும் விவரிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வினையும் கற்பனை செய்து பார்க்கையில் அதற்கு மேலும் தொடர்ந்து வாசிப்பதென்பது சாத்தியமற்றதாகிறது. பூமி உருவான காலத்திலிருந்தே கூட இப்படியொரு பேரழிவினை யாராலும் நிகழ்த்தியிருக்க முடியாதென்பதுதான் உண்மை.

எலீ வீசலின் இந்த நூலினைத் தமிழில் மிகச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார் ரவி இளங்கோவன். யுனைட்டட் ரைட்டர்ஸ் இந்நூலைப் பதிப்பித்துள்ளார்கள். விலை ரூ.70. பக்கங்கள் : 126. ( பின்ணினைப்பான நாஜி வதைமுகாம் குறித்த ஓவியங்கள் தவிர்த்து )